| கொழும்பில் 64 பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமான தமிழர்கள் கைது, |
| 04 February 2007 |
கொழும்பில் தங்கி இருந்த 300க்கும் மேற்பட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழர்கள் நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் இலங்கையின் 59 ஆவது சுதந்திர தின பாதுகாப்பிற்கான முன்னோடி நடவடிக்கையாகவே சந்தேகத்திற்கிடமானவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டாம் வீதி, சோனகத் தெரு, ஆட்டுப்பட்டித் தெரு, குணசிங்புர, செட்டித்தெரு, கதிரேசன் வீதி, சென்ட்ரல் வீதி பகுதிகளிலுள்ள தங்குமிடங்கள் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா மேட்டுத்தெரு, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி போன்ற இடங்களிலிருக்கும் தங்குமிடங்கள் ஆகியவற்றையும் கொழும்பு புறநகர் கிருலப்பனை ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, முகத்துவாரம், கிரேண்ட் பாஸ், தெமட்ட கொடை, மருதானை ஆகிய பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான இடங்களும் தங்குமிடங்களும் சுற்றி வளைப்பு தேடுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுகள் இடம்பெற்றன. கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் அடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் தாம் கொழும்பிற்கு வந்து தங்கி இருப்பதற்காக தகுந்த ஆதாரங்கள் தங்களை அடையாளப்படுத்தும் அடையாள அட்டை உட்பட்ட அரசாங்கம் வழங்கியுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட இந்த கைதுகள் அதிகாலை 4 மணி முதல் மாலை வரை இடம்பெற்றுள்ளதுடன் சிலர் இரவு உடைகளுடனும் அரைகுறை ஆடைகளுடனும் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ளவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கு செல்ல வந்திருந்தவர்களாவர். மேலும் சிலர் திருமணங்கள், கல்வி நடவடிக்கைகள், இந்தியா செல்வதற்கு, மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள மற்றும் தொழில் நிமித்தம் கொழும்பிற்கு வந்து தங்கி இருந்தவர்களாவர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட மலையகம் மற்றும் அண்மைக் காலத்தில் தென்பகுதியிலிருந்து கொழும்புக்கு வந்திருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்கென கூறி சந்தேகத்தின் பேரில் அப்பாவி தமிழர்களை கைது செய்துள்ள பொலிஸாரின் நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் சுதந்திரத்தை தட்டிப் பறிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறினர். கைதானவர்களின் விடுதலைக்கு உதவுமாறு தமிழ் அரசியல் வாதிகளிடம் கோரிக்கைகளையும் அவர்கள் விடுத்துள்ளனர்.
இக் கைது நடவடிக்கைகள் தொடர்பாக புறக்கோட்டை பொலிஸாரிடம் கேட்ட போது சுதந்திர தின வைபவங்களை குழப்பியடிக்கும் நோக்கில் கொழுற்பிற்குள் ஊடுருவியுள்ள புலிகள் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி சந்தேகத்திற்கிடமான 63 பேரை தாங்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். இவர்களில் ஏராளமானோர் தங்குமிடங்களில் வைத்தே கைதாகியுள்ளார்.
குறிப்பிட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கைகளுக்கு கொழும்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் நால்வர் தலைமை தாங்கியுள்ளனர். |
posted by Norsri @ Sunday, February 04, 2007  |
|
|
|