| ஆயுதங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் - வாகரையில் ஜனாதிபதி அறிவிப்பு; |
| 04 February 2007 |
ஆயுதங்களை கையளித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் அரச படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள வாகரைக்கு நேற்றுக்காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலிகளை மடக்கி பொதுமக்களை விடுவிக்கப்போவதாக சூளுரைத்திருக்கும் அதேசமயம், சமாதானப் பேச்சை ஆரம்பிப்பதற்கு கதவுகள் தற்போதும் திறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
வாகரை விஜயத்தின்போது ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் தீர்வுத் திட்டத்தை புலிகளுக்கு வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் ஆனால், விடுதலைப் புலிகள் ஆயுதக் கையளிப்பை ஆரம்பிக்க வேண்டியது அவசியமெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
"ஆயுதங்களை சரணடையச் செய்வதை அவர்கள் ஆரம்பித்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம். பயங்கரவாதிகளிடமிருந்து நாம் பொதுமக்களை விடுவித்திருக்கிறோம். புலிகளை நாம் மடக்க வேண்டியுள்ளது. பொதுமக்களை விடுவிக்க இரு வழிமுறைகள் உள்ளன. நாங்கள் அரசியல் தீர்வை முன்வைக்கவுள்ளோம். இராணுவத் தீர்வை விரும்பவில்லை. மக்களைக் கொன்று தமது ஆயுதபலத்தை காட்டுவதற்கு முயற்சிக்காமல் பேச்சு மேசைக்கு அவர்கள் வரவேண்டிய முக்கியமான தருணம் இதுவாகும். அவர்களை (புலிகளை) பேச்சுவார்த்தை மேசைக்கு வர வழைக்க என்னால் முடிந்தளவுக்கு நான் முயற்சிப்பேன். இது எனது கடமை. அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆயினும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம் அவர்களுடன் பேச்சுக்கு தயாராக இருக்கிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், பொது மக்களில் ஒருவருக்குக் கூட உயிரிழப்பு இல்லாமல் அந்தப் பகுதியில் விடுவித்ததற்காக படையினருக்கு நன்றி தெரிவிக்கவே தான் அங்கு வருகை தந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஏ.எவ்.பி.செய்திச் சேவை தெரிவித்தது.
அத்துடன், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை வரவழைத்து அவர்களின் அரசாங்கங்களும் மக்களும் நிதியை அனுப்பியிருந்ததால் அந்தப் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காண்பிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததுடன் அடுத்த இரு வாரங்களுக்குள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை ஆரம்பித்து பொது மக்கள் திரும்பி வருவதற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
தளபாடங்களைப் பெற்று முழு அளவிலான அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் வீடுகளை நிர்மாணிக்க விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
புலிகள் ஜனநாயக வழிக்கு வருவதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என்றும் `யுத்த நிறுத்தம்' யுத்த நிறுத்தமாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இதேவேளை , கொழும்பிலிருந்து காலை 8.30 மணிக்கு 5 ஹெலிகொப்டர்களில் வாகரைக்கு சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் பிரதேச செயலகத்தில் பொதுமக்களையும் சந்தித்துள்ளனர்.
இங்கு ஜனாதிபதிக்கு இந்து மத முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அங்கு இருந்த மக்கள் தம்மை மீளக்குடியமர்த்துவதுடன், தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி மீள்குடியேற்றத்திற்கு சகல வித ஒத்துழைப்புகளையும் அரசு வழங்குமென்றும் மக்களை அச்சமின்றி மீளக்குடியேற்றலாமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீனவர்களுக்குரிய படகுகளை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்களின் தொழில் நடவடிக்கைகள் மேம்பட உதவுமாறும் அமைச்சர்களிடம் பணித்துள்ளார்.
பின்னர் வாகரை பொலிஸ் நிலையம் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு பொலிஸாருடன் கலந்துரையாடியதுடன், மக்களுடன் சிநேகபூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, வாகரை வைத்தியசாலைக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் வைத்தியர்களுடன் வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இதேநேரம், ஜனாதிபதி வாகரையை புலிகளிடமிருந்து மீட்பதற்கான படை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன் அவர்களுக்கு சுதந்திரதின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
பின்னர் வாகரையிலிருந்து சம்பூருக்கு சென்றுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு வெளிச்ச வீட்டை பார்வையிட்டுள்ளதுடன் அங்குள்ள கடற்படை தளத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.
சம்பூர் அதனையொட்டிய பகுதிகளை மீட்பதில் பங்காற்றிய படை வீரர்கள் மற்றும் அங்கு கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதுடன், சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சம்பூரிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள படைவீரர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடனான இவ்விஜயத்தில் அமைச்சர்களான நிமால் சிறிபால டீ சில்வா, றிஷாத் பதியுதீன், அமீர் அலி, பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ், முப்படைத்தளபதிகள், பாதுகாப்பமைச்சின் செயலர் கோதாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, இவ்விஜயங்கள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு எதுவுமே அறிவிக்கப்படவில்லை எனவும் அவ்வாறே வாகரையை சென்றடையும் வரை சில அமைச்சர்களுக்கு தாம் எங்கு செல்கிறோம் என்ற விபரம் கூட அறிவிக்கப்படவில்லையென அறியவருகிறது. |
posted by Norsri @ Sunday, February 04, 2007  |
|
|
|